
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக ஒருமித்து செயற்படும்.
மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, அதனை நிலைநிறுத்துவதனையே தமிழ்முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர். அதனைச்செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீமும் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நேற்று திங்கட்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு;
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏன் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை?
சம்பந்தன்; கூட்டமைப்பு தீர்மானமொன்றை எடுத்தது, தீர்மானம் எடுக்கும் கூட்டத்தில் நான்கு உறுப்பினர்களை தவிர ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மொழி பேசும் மக்கள் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அறிவுறுத்தல்களை கேட்டுள்ளனர்.
பொது தேர்தலில் இணைந்து போட்டியிடுவீர்களா?
ஹக்கீம்;ஜனாதிபதி தேர்தலில் இணைந்து வேலைசெய்தோம். அதனையே தொடர்ந்து முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது . பொதுத் தேர்தலில் இலச்சினை தொடர்பிலான பிரச்சினை இருக்கின்றது . பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு அரசாங்கமே விரும்பவில்லை என்பது அறிக்கைகளின் மூலமாக புலப்படுகின்றது.
பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டும்?
சம்பந்தன்; ஐக்கியப்பட்டு இணைந்து வேலைசெய்யவேண்டும். பிரச்சினைக்கு இணைந்து தீர்வுகாண்பதற்கு முன்வரவேண்டும். பிரிவினைவாத பிரசாரத்தை மேற்கொள்வதன் மூலமாக அபிவிருத்தியை எதிர்பார்க்கமுடியாது. அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக அமையும். பிரிவினைவாதத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நான் அன்றிலிருந்தே கோரிவருகின்றேன்.
எதிர்காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுமா?
சம்பந்தன்; இரண்டு கட்சிகளும் தமிழ் மொழி பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செற்பட்டு வருக்கின்றன. ஒருமித்து சந்தித்தோம். மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்பி அதனை நிலைநிறுத்துவதனையே தமிழ் முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
ஹக்கீம்; அரசாங்க சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள முடிவினை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆணையாளர் சில விடயங்களை வன்மையாக கண்டித்திருக்கின்றார். இறுதி அறிவிப்பின் போது தேர்தல் ஆணையாளர் மனநிலை சரியில்லாமலே அறிவித்தார் என்பதனை சகலரும் அறிவர்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையே?
பதில்; குண்டுகள் வெடித்தமையினால் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. வடக்கை பொறுத்தமட்டில் 2 இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. அதில் 1 இலட்சத்து 75 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர் என்றனர்.