
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் என்னையும், எங்கள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நேற்று திங்கட்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது. நடந்துமுடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மொழி பேசும் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாக்களித்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அம்பாறையில் கூடியவர்கள் என்னையும் எங்களை சேர்ந்த இன்னும் சிலரையும் கொலைச்செய்வதற்கு சதி திட்டம் தீட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மொழி பேசும் மக்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வாக்களித்தனர். அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர். அதற்கு மத்தியில் வாக்களித்த தமிழ் மொழிபேசும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எங்களுடைய இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்